மதுரை: விமான நிலையத்தில் தமிழிசையுடன் வாக்குவாதம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, மாணவி சோபியாஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளார். தூத்துக்குடி, கந்தன் காலனியை சேர்ந்த லூயிஸ் சோபியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கனடாவிலுள்ள மாண்ட்ரீல் பல்கலை.யில் படிக்கிறேன். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் கடந்த செப்.3ல் பயணித்தேன். என்னுடன் அதே விமானத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் வந்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலர் இறந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. இதனால் விமானத்தில் இருந்து இறங்கும் நேரத்தில், மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை சவுந்தர்ராஜன் விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் கடுமையாக நடந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தமிழிசை அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, என்னுடைய வழக்கின் மீது போலீசார் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி